மக்களவை தேர்தல் எதிரொலி: வாக்களிக்க ஆர்வம் காட்டும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரயில்கள், பேருந்துகளில் பயணம்

திருப்பூர்: நாடாளுமன்ற தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட பிற மாவட்ட தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகரித்து காணப்பட்டனர். பின்னலாடை நகரமான திருப்பூரில் அதிகளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நாளை தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டும் தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தங்களது சொந்த ஊர்களுக்கு ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட துவங்கியுள்ளனர். இதனை ஒட்டி இன்று வழக்கத்திற்கு மாறாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருச்சி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயிலில் பொதுமக்களின் கூட்டமானது அதிக அளவில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி திருப்பூரில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து நிலையங்களிலும் பொதுமக்களின் கூட்டமானது அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

 

The post மக்களவை தேர்தல் எதிரொலி: வாக்களிக்க ஆர்வம் காட்டும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரயில்கள், பேருந்துகளில் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: