இஸ்ரேல், ஹமாஸ் போரில் இதுவரை 286 இஸ்ரேல் ராணுவத்தினரும் 51 காவல்துறையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இஸ்ரேல் ராணுவம் காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காஸாவின் வடக்கில் உள்ள ஒரு பகுதி முழுவதும் இடிந்து தரைமட்டமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் வானிலிருந்து குண்டுமழை பொழிவதாக உயிர்தப்பிய பாலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலால் தரைமட்டமான கட்டட இடிபாடுகளில் சிக்கி புதையுண்ட பெற்றோர்களையும், குடும்பத்தினரையும், உறவினர்களையும் தேடி கதறி அழும் குழந்தைகளின் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளன.
இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்களை மட்டுமல்லாது அப்பாவி பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது குண்டுமழை பொழிவதாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் மூர்க்க தனமான தாக்குதலால் தரைமட்டமான கட்டட இடிபாடுகளுக்குள் சுமார் 1000 பேர் சிக்கி இருக்க கூடும் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் இதுவரை 2670 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களில் சரிபாதி எண்ணிக்கையில் குழந்தைகள் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கெடு முடிவடைந்த பிறகான நேற்றைய தாக்குதலில் மட்டும் சுமார் 9600 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காஸா மீது மும்முனை தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது.
The post இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 10வது நாளாக தொடரும் தாக்குதல்: பெற்றோரை இழந்த குழந்தைகள் கதறியழும் கொடூர காட்சிகள் appeared first on Dinakaran.
