“வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”: அமலாக்கத்துறை பதில் மனு

சென்னை: அமலாக்கத்துறை விசாரணையை தள்ளி வைக்க கோரிய செந்தில் பாலாஜி மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்திருக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் 2023ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 22ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவங்க கூடாது என்றும் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவுக்கு பதில் அளித்து அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், வழக்கின் விசாரணையை முடக்கி குற்றச்சாட்டு பதிவையும் சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதே தவிர, குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்படவில்லை. போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளிவைக்ககோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான மோசடி தொடர்பான மத்திய குற்றப்பிரிவின் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோர முடியாது. எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை போன்றது எனவும் பதில் மனுவில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதில் அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் அவகாசம் கூறப்பட்டுள்ளதை அடுத்து விசாரணையை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

The post “வழக்கின் விசாரணையை முடக்கும் நோக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”: அமலாக்கத்துறை பதில் மனு appeared first on Dinakaran.

Related Stories: