மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

கோவை, டிச. 2: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குனியமுத்தூர் பகுதிகளில் பெய்த மழையால் சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு, குனியமுத்தூர் லட்சுமி நகர், வெற்றித்திருநகர், வசந்தம் கார்டன் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த பகுதிகளை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கூறுகையில், ‘‘மோட்டார் பம்புகள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி சரி செய்து நீரை அப்புறப்படுத்திட வேண்டும். இப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.  அதனை தொடர்ந்து செங்குளத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி கமிஷனர் குளத்தில் உள்ள நீரின் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் சோழன் நகர் பகுதியில் மழை நீர் செல்லும் கால்வாயில் அடைப்புகள் ஏற்படாத வண்ணம் உள்ளதா? என அவர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் லட்சுமணன், தெற்கு மண்டல உதவி கமிஷனர் ரவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: