கடலூர், டிச.2: டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கடலூரில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில் 10 போலீசார் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் முன் முற்றுகை போராட்டம் நடத்த நேற்று காலை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மா.கம்யூ கட்சியினர் திரண்டனர். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பையன், மருதவாணன், சுப்பராயன், நகர செயலாளர் அமர்நாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தலைமை தபால் நிலைய வாயிலை நோக்கி அவர்கள் சென்றபோது போலீசார் பேரிகாட் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினர் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.