மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி

மரக்காணம், ஏப். 23: மேய்ச்சலுக்கு சென்றபோது மர்ம நபர் கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள காக்காபாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சுதாகர்(45), விவசாயி. இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சுதாகர் வழக்கம் போல் தனது பசு மாடுகளை மேய விட்டிருந்தார். பின்னர் இரவு மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளது. இதனால் சுதாகர் மாட்டை தேடி சென்றுள்ளார்.அப்போது அவரது பசுமாட்டை யாரோ மர்ம நபர் கொடூரமான முறையில் கத்தியால் வயிற்று பகுதியில் வெட்டியதில் ரத்தம் கொட்டி குடல் சரிந்த நிலையில் கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாகர் கொடுத்த தகவலின் பேரில் வந்த கால்நடை மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தும், பலனின்றி மாடு பரிதாபமாக இறந்தது. இது குறித்து சுதாகர், மரக்காணம் காவல் நிலையம் மற்றும் விலங்கு நல வாரியத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் மர்ம நபர்கள் பல மாடுகளை கத்தியால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. காக்காபாளையம் பகுதியில் உள்ள குளங்களில் இருந்த தண்ணீரை, ஒரு சிலர் மின் மோட்டார்களை பயன்படுத்தி விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளனர். இதனால் குளங்களில் தண்ணீர் வறண்டதால் மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் குடிக்க செல்லும் போது மர்ம நபர்கள் மாடுகளை வெட்டி கொடுமை செய்து வருவதாக கூறப்படுகிறது.

The post மேய்ச்சலுக்கு சென்றபோது கத்தியால் வெட்டியதில் குடல் சரிந்து பசு மாடு பலி appeared first on Dinakaran.

Related Stories: