விழுப்புரம், நவ. 30: தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை நிவர்புயலையொட்டி, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தொடர் மழை மற்றும் பலத்த காற்றினால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன. அதன்படி, வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை இணைந்து சேதமடைந்த பயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அதேபோல், மின்வாரியம் சார்பில் எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அதன்படி, நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பெண் உயிரிழப்பும், 71 ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் 1024 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2047 கோழிகள் உயிரிழந்துள்ளது என கால்நடைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.