கடலூர், நவ. 27: தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்பு குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்திய பிறகு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடலூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர் மாவட்டம் புயலால் பாதிக்கப்படும் என கூறியதையடுத்து நான் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழங்கிய ஆலோசனையை அடுத்து நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. தமிழகத்தில் நிவர் புயலுக்கு 2,999 முகாம்களில் 13 லட்சம் பேர் வரை தங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.