ஆர்.எஸ்.மங்கலம் அருகே அடிக்கடி ஏற்படும் மின் துண்டிப்பு அவதிப்படும் பொதுமக்கள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.24: திருத்தேர்வலை, ஆயங்குடி உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருத்தேர்வளை மற்றும் ஆய்ங்குடி ஊராட்சி பகுதிகளில் ஓரு சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாகவும் சில இடங்களில் சாலையோரம் உள்ள மரங்களில் பின்னி பிணைந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி  மின் துண்டிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதுபற்றி மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அப்பகுதியில்  பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரங்களில் பின்னி பிணைந்து செல்லும் காட்சிகள் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக உள்ளது. இவ்வாறு இருப்பதால் கிராமப் பகுதிகளில் பல மாதங்களாக சிறியவர்கள், வயதான முதியவர்கள் நோயாளிகள் மற்றும் படிக்கும் மாணவர்கள் என அனைவரும் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளோம். இது குறித்து பல முறை மின்வாரிய துறைக்கு தகவல் கூறியும் அதனை கண்டு கொள்ளாமல் காட்சி பொருளாகவே பார்த்து வருகின்றனர். வீடுகள் அருகிலும், சாலை ஓரங்களிலும் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதாலும் ஒரு விதமான அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் அச்சமாக உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி மின் வழித்தடங்களை சரி செய்து சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்’’ என்கின்றனர்.

Related Stories: