ஆண்டிபட்டி, அக்.22: போதிய நிதியில்லாததால் கிராம வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்துக்குட்பட்ட 30 ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வீட்டுவரி வசூலித்தல் முக்கிய வரி வருவாயாக இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அரசு மாதந்தோறும் வழங்கி வந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் வரி இனங்களை வசூல் செய்ய கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஊராட்சிகள் நிதியில்லாமல் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால், பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி தவித்து வருகின்றனர்.