போனஸ் வழங்காததை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி, அக்.22:  பரமக்குடி ரயில் நிலையம் முன்பு உற்பத்தித்திறனுக்கான போனஸ் வழங்காததை கண்டித்து எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் ரயில்வே பணியாளர்களுக்கு, வருடந்தோறும் உற்பத்தி திறனுக்கான போனஸ் கடந்த 1974 முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரயில் நிறுத்தப்பட்டதால், போதுமான வருமானம் இல்லை என காரணம் காட்டி, 2019-20ம் ஆண்டிற்கு வழங்கப்படும் உற்பத்தி திறனுக்கான போனஸ் வழங்காமல் நிறுத்தி ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனை கண்டித்து, தமிழகம் முழுவதும் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மானாமதுரை கிளை சார்பாக, நேற்று, பரமக்குடி ரயில் நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ட்ராபிக் கவுன்ஸில் சேர்மன் பாலமுருகன் தலைமை வகித்தார். கிளை ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். மானாமதுரை கிளை செயலாளர் சங்கரதாஸ், மதுரை கோட்ட உதவி செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் போனஸ் நிறுத்திய, மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக பேசினர். இறுதியில், பரமக்குடி ஒருங்கிணைப்பாளர் தேசிங்குராஜன் நன்றி கூறினார். இதில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துண்டனர்.

Related Stories: