திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல்லில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அதிமுகவினரால் சாலைகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அதிமுக தொடங்கி 49வது ஆண்டை முன்னிட்டு நேற்று திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் சீனிவாசனின் ஆதரவாளர்கள் காரை நிறுத்தினர். இதே போல், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவருடன் வந்த முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் 10க்கும் மேற்பட்ட கார்களில் வந்து பஸ்நிலையம் நுழைவு வாயிலில் நிறுத்தினர். இதனால் பஸ்கள் உள்ளே வரமுடியாமல் சுற்றி வந்தன. இதனால் பயணிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.