சேலம், செப்.29:மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட திமுக தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், இடைப்பாடி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தார். இதில், வாழைக்கன்று, கரும்பு, நிலக்கடலை, பருத்திச்செடி, நெற்பயிர் ஆகியவற்றுடன் கலந்து கொண்ட, அனைத்து கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி பேசுகையில், “விவசாயிகள், விவசாய ெதாழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை திரும்ப பெறும்வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி போராட்டங்கள் தொடரும்,” என்றார்.