நண்பர் வீட்டில் கேபிள் ஆபரேட்டர் தற்கொலை

திருச்செங்கோடு, மார்ச் 17: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம் மாமரப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மகன் ஜோதிபாசு(28), கேபிள் ஆபரேட்டரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா(27) என்பவருக்கும் சுமார் 3 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ரஞ்சிதா கணவனை பிரிந்து சென்று, குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால், கடந்த 6 மாத காலமாக தனிமையில் தவித்து வந்த ஜோதிபாசுவுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை அவர் அருகிலுள்ள பாலமேடு கிராமத்தில்  வசித்து வரும் நண்பரான சிவகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லை. அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். மாலையில் வேலை முடிந்ததும் வீடு திரும்பிய போது, வீட்டின் உத்தரத்தில் ஜோதிபாசு தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஒரு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், மனைவி- குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் ஜோதிபாசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Related Stories: