கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும்

நாமக்கல், மே 5: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 107.6 டிகிரி மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று தெற்கு திசையில் இருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள், பெரும்பாலும் வெப்ப அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. பகல் நேர வெப்பநிலை 107.6 டிகிரி அளவில் உயர்வதால், கோழிகள் தீவிர வெப்ப அயற்சிக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

எனவே, கோழிப்பண்ணையாளர்கள் தகுந்த கோடைகால பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். வெப்ப அயற்சியின் தாக்கத்தைக் குறைக்க தெளிப்பான்கள் உபயோகிக்க வேண்டும். வெயில் குறைந்த நேரங்களில் அதிகாலை, மாலை வேளைகளில் தீவனம் அளிக்க வேண்டும். வைட்டமின்-சி சார்ந்த நுண்ணூட்ட சத்துகளை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: