உ.பாளையம்/பெரியகுளம், மார்ச் 13: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத அதிமுக அரசை கண்டித்து, உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் இஸ்லாமிய அமைப்பினர் குடியேறும் போராட்டம் நடத்தினர். பெரியகுளத்தில் விடியவிடிய மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தினர்.தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாத அ.தி.மு.க. அரசை கண்டித்து, உத்தமபாளையத்தில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர், அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பினர் சார்பில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனைஅடுத்து தாலுகா அலுவலகம் முன்பு இந்த அமைப்பின் தலைவர் கலீல்ரகுமான், துணை தலைவர் கமர்தீன் தலைமையில் நேற்று நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ்மந்திரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெர்க்மான்ஸ் முன்னிலை வகித்தனர். இதனால் டி.எஸ்.பி. சின்னகண்ணு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பாய், படுக்கை, தலையணை, வீட்டுசாமான்களுடன் ஊர்வலமாக வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து தாசில்தார் உதயராணியிடம் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.