அரவக்குறிச்சி அருகே தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்ற 14 ஆடுகள் மர்ம சாவு

அரவக்குறிச்சி. மார்ச் 13: அரவக்குறிச்சி அருகே தோட்டத்தில் மேய்ச்சலுக்குச் சென்ற 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதி ஆடு வளர்க்கும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரவக்குறிச்சி ஒன்றியம் நாகம்பள்ளியை அடுத்த அரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(42). விவசாயி. இவர் 20க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான நிலத்தில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

இந்நிலையில் மதியம் ஆடுகளை பார்க்கச் சென்றபோது 14 ஆடுகள் கீழே விழுந்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. சந்தேகமடைந்த முருகேசன் உடனடியாக மலைக்கோவிலூர் கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காட்டினார். அப்போது ஆடுகள் இறந்து விட்டதாக கால்நடை மருத்துவர் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் செம்மறி ஆடுகள் வளர்த்து பிழைக்கும் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: