திருப்பரங்குன்றம், மார்ச் 12: தமிழக வருவாய்துறையினர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் கூடுதலாக ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் சுற்றுச்சுவர் கட்டும் பணி தாமதமாவதாக புகார் எழுந்துள்ளது. மதுரை தோப்பூரில் சுமார் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால், மருத்துவமனை அமையுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.