மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட் விற்ற கடையின் சான்று ரத்து: அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

 

மதுரை, ஏப் .26: மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஸ்மோக் பிஸ்கெட் விற்ற கடையில் அதிரடி சோதனை நடத்தி, அந்த கடைக்கான உணவுபாதுகாப்பு பதிவுச் சான்றினை ரத்து செய்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்தனர். மதுரை முழுவதும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்பேரில் நேற்று மதுரை தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு கடையில் திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் ஸ்மோக் பிஸ்கட் விற்பனை செய்யப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, அதன் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

மேலும் கடையைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்த விளம்பர ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டு, கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தனர். மதுரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறும்போது, ‘‘ஸ்மோக் பிஸ்கெட் விற்பனை குறித்து தொடர் சோதனை நடத்தி வருகிறோம். விதிமீறி விற்பனையில் ஈடுபடுவோரின் கடைகளுக்கான சான்று ரத்து மட்டுமல்லாது, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சோதனைகளும், நடவடிக்கைகளும் மதுரை முழுவதும் தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.

The post மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட் விற்ற கடையின் சான்று ரத்து: அதிகாரிகள் தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: