நெய்வேலி, மார்ச் 11: குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் அதிகரித்து வரும் குடிநீர் ஆலைகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்படும் வறட்சியின் பாதிப்பால் ஏரி குளங்களில் பெரும்பாலும் நீர் மட்டம் குறைந்துள்ளது. சில குளங்களில் மட்டுமே நீர் தேங்கி குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்கும் நீர் விரைவாக வற்றி விடுகிறது. இந்நிலையில் வடலூர், விருப்பாச்சி, தையல்குணம்பட்டினம், ஆடூர், நெய்வேலி, சாத்தமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதியில் தொடங்கப்பட்டு வந்த குடிநீர் ஆலைகளால் கிராம பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இந்த ஆலைகளில் ராட்சத போர் மூலம் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பாட்டில்களில் அடைத்து வணிகரீதியாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த ராட்சத போர்வெல்களால் அருகில் உள்ள கிணறுகள், வீடுகளில் உள்ள போர்வெல்கள் மற்றும் அரசு சார்பில் போடப்பட்டுள்ள போர்வெல்களில் நிலத்தடி நீர் மட்டம் விரைவாக குறைந்து வருகிறது.