ஈரோடு, மார்ச் 11: ஈரோடு கள்ளுக்கடை மாரியம்மன் கோயிலில் இன்று குண்டம் விழா நடைபெற உள்ளது. ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் குண்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான குண்டம் விழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி கொடியேற்றுதலும், அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். நேற்று இரவு அக்னிகபாலம் வைத்தலும், இன்று இரவு குண்டம் பற்ற வைத்தலும், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா இன்று (11ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து பொங்கல் வைத்தலும், அம்மன் ஊர்வலமும், 12ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.