சிவகங்கை, மார்ச் 10: சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கலெக்டர் தெரிவித்தார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதித்தவர்கள் இல்லை. சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளாமானோர் சீனாவில் ஓட்டல் தொழில் செய்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் பொது சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் மூலம் தினமும் வீட்டில் சென்று கண்காணித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கழிப்பறை வசதி மற்றும் வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தனி அறையில் பாதுகாப்புடன் வைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் குறித்த பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.