பொள்ளாச்சி, மார்ச். 10: பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட சர்க்கஸ் மைதான காலியிடத்தில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சியில் குடியிருப்பு மிகுந்த இடத்தில் ஒன்றான மகாலிங்கபுரத்தின் ஒரு பகுதியில் சர்க்கஸ் மைதானம் செயல்பட்டு வந்தது. நகராட்சிக்கு சொந்தமான இந்த காலியிடத்தில், நகரில் ஆங்காங்கே நடக்கும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பணிக்கு தேவைக்கான மண் மற்றும் கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனுடன் சேர்ந்து வெளியே இருந்து கொண்டுவரப்படும் கழிவுகள் கொட்டப்படும் செயல் தற்போது அரங்கேறியுள்ளது. கடந்த சில மாதமாக, நகராட்சிக்குட்பட்ட இந்த காலியிடத்தில் சரக்கு வாகனங்களில் இருந்து வெவ்வேறு பகுதியிலிருந்து கொண்டுவரப்படும் குப்பை மற்றும் கோழிக்கழிவு உள்ளிட்டவை ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர்.