13ம் தேதி நடக்கிறது திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா

திருவாரூர், மார்ச் 10: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கோடியேற்றம் நாளை நடைபெறுகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். அதன்படி இந்த விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் இந்த விழாவினையொட்டி கோயிலின் மூலவரான வன்மீக நாதர் சன்னதி எதிரே 2ம் பிரகாரத்தில் இருந்து வரும் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் நாளை (11ம் தேதி) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் சிவாச்சாரியார்கள் மூலம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான எற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: