நீடாமங்கலம், மார்ச் 6: திருவாரூர் மாவட்ட சைல்டு லைன் 1098க்கு வந்த தகவலை தொடர்ந்து நீடாமங்கலத்தில் நடக்க இருந்த 4 குழந்தை திருமணங்கள் ஒரே நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி காங்கேயன் திடலில் பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு காங்கேயன் திடலில் திருமணம் ஏற்பாடு நடைபெறுவதாக மாவட்ட சைல்டுலைன் 1098க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர் மனோகர், சைல்டு லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், அணி உறுப்பினர் மரகதமணி, சமூகநலத்துறை ஊர்நல அலுவர்கள் ரேவதி, சுதா, வருவாய் ஆய்வாளர் கதிரவர், விஏஓ துரை, அந்தோணி உள்ளிட்டடோர் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை செய்ததில் உண்மை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீடாமங்கலம் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த 4 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கு குழந்தை திருமண தடைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.