கரூர், மார்ச் 6: கோடை விற்பனையை எதிர்பார்த்து தர்பூசணி சாகுபடி நடைபெறுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை தவிர்க்க மிக குறைந்த விலையில் கிடைப்பது தர்பூசணி என்பதால் விற்பனையும் அதிகமாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம், சங்கரம்பட்டி, கூம்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்பூசணிப்பழம் 70 நாட்களில் அறுவடையாகும். சொட்டுநீர் பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. முன்பு ஏக்கருக்கு 10முதல் 15டன் வரை கிடைத்தது. தற்போது 8 முதல் 9 டன் வரை தான் விளைச்சல் கிடைத்து வருகிறது. மேலும் வழக்கமாக பூசணியின் எடை 15 கிலோ இருக்கும். ஆனால் தற்போது எடையும் குறைந்து 8 கிலோ முதல் 9 கிலோ வரைதான் விளைச்சல் கண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.