திருச்செங்கோடு, மார்ச் 6: திருச்செங்கோடு அருகேயுள்ள சீனிவாசம்பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் மற்றும் மதுரை வீரன் கோயிலில் திருவிழா நடக்கிறது. இதையொட்டி, நேற்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் விரமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பத்ரகாளியம்மன், மதுரைவீரன் வேடமிட்டு ஆடிவந்தனர். விழாவை முன்னிட்டு அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு, முளைப்பாலிகை எடுத்து வந்தும் வழிபட்டனர். இரவில் வான வேடிக்கை, தெருக்கூத்து நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று வாழ்வியல் மேடை நாடகம் நடைபெற்றது. விழாவில் சீனிவாசம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.