கடலூர், மார்ச் 5: சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகளை வினியோகம் செய்ய மாவட்ட தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகின்றன. மரங்கள் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டையாக்சைடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை கணிசமாக குறைப்பதுடன் மனிதர்களுக்கும், இதர உயிரினங்களுக்கும் தேவையான ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. சமீபகாலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அத்தினத்தின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச் செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த நடவு செடிகள், பழ செடிகளை தரமானதாகவும் குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.