குளித்தலை, மார்ச் 4: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் ரயில் நிலையம் அருகே அக்ரஹாரம் உள்ளது. இந்த அக்ரஹாரத்தில் சைவ வைணவ பழங்கால கோயில்கள் இருந்து வந்துள்ளது. இக்கோயில்களில் அப்பகுதி பொதுமக்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு செய்து கிழக்குப் பகுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மேற்கு பகுதியில் லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய 2 கோயில்களும் புதுப்பிக்கப்பட்டு நாளை காலை 7 மணி முதல் ஒன்பது மணிக்குள் இரு கோயில்களிலும் அரை மணி நேர இடைவெளியில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவினையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி நேற்று காலை மருதூர் சுற்றியுள்ள பக்தர்கள் காவிரியிலிருந்து புனிதநீர் கொண்டுவந்து நித்தியா ராதனம், புண்யாக வாசனம், சுதர்சன ஹோமம் நடைபெற்று பூர்ணாகுதியுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.