ஜெயங்கொண்டம், மார்ச் 3: ஜெயங்கொண்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரத்தை வெட்டிய அமமுக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அமமுக நிர்வாகி தேவா என்பவருக்கு சொந்தமாக ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில், பெட்ரோல் பங்க் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலை, திருமண மண்டபம் உள்ளன. இவரது திருமண மண்டபத்திற்கு எதிரே கரடிகுளம் பஸ் ஸ்டாப்பும், அதன் ஓரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரமும் உள்ளது. பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பொதுமக்கள் அதன் அருகே உள்ள மர நிழலில் இளைப்பாறுவது வழக்கம். திருமண மண்டபத்திற்கு வரும் கார்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்த இட பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி அமமுக நிர்வாகி நேற்று மாலை தனது ஆட்களை வைத்துக்கொண்டு மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது.