ஈரோடு, மார்ச் 3: ஈரோடு எஸ்பி அலுவலக கூட்டரங்கம் போட்டி தேர்வு நூலகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலக முதல் தளத்தில் போலீசாருக்கான ஏசி வசதியுடன் கூடிய நவீன கூட்டரங்கம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. இதில், உயர் அதிகாரிகள் வரும் போதும், மாவட்ட அளவில் போலீசாருக்கான ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு வந்தது. இந்த கூட்டரங்கு பிற நேரத்தில் அதிக பயன்பாடு இல்லாமல் இருந்தது. இதையடுத்து, இந்த கூட்டரங்கினை போலீசாரின் பணி நேரத்திற்கு பிறகு போட்டி தேர்வு நூலகமாக மாற்ற எஸ்பி சக்திகணேசன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி, தற்போது போட்டி தேர்வுகளுக்கான நூலகமாக மாற்றி அதற்கு தேவையான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.