நாசரேத், மார்ச் 1:நாசரேத்தில் காட்சி பொருளாக இருந்த துணை வேளாண்மை விரிவாக்க மையம் தினகரன் செய்தி எதிரொலியாக திறக்கப்பட்டது. நாசரேத் கே.வி.கே சாமி சிலை அருகே மெயின் ரோட்டில் ரூ.30 லட்சத்தில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு 6 மாதமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து கடந்த 26ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக துணை வேளாண் மையத்தை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன் தலைமை வகித்து நேற்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். ஆழ்வார்திருநகரி வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வரவேற்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஜாகீர்உசேன், உதவிபொறியாளர் நடராஜன், வள்ளியூர் வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன், தென்கரைகுளம் பாசன சங்க செயலாளர் ராஜேந்திரன் பேசினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு அம்மா திட்டம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மாவட்ட அளவிலான நுண்ணீர் பாசனம் பயிற்சி நடந்தது.