சேத்தியாத்தோப்பு, பிப். 28: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலூரில் மனு நீதி முகாம் நடந்தது. கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன், சிதம்பரம் சப்- கலெக்டர் விசுமகாஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னலூர் ஊராட்சி தலைவர் பிரபுதாஸ் வரவேற்றார். கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி ஜோதி, புவனகிரி தாசில்தார் சுமதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாலட்சுமி வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அனிதாபொய்யா மொழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வேளாண்துறை மற்றும் கால்நடை, மருத்துவத்துறைகளில் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விரிவாக பேசினர். முகாமில் சரவணன் எம்.எல்.ஏ., கலெக்டர் அன்புச்செல்வனிடம், கிடப்பில் போடப்பட்டுள்ள விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை சாலை பணியை துவங்கி விரைந்து முடிக்க வேண்டும். முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ள சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொதுமருத்துவமனையாக்க வேண்டும். நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு போதுமான தொகை மற்றும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சாலை பணியை துவங்கவும், இனிவரும் காலங்களில் நெய்வேலி என்.எல்.சி., நிறுவனம் கையகப்படுத்தும் நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 15 லட்சம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.