சிவகங்கை, பிப். 28: சிவகங்கை மாவட்டத்தில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்க வேண்டிய நிலையில் பொதுமக்கள் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் குளத்து நீர் மற்றும் ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையின்மை, வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் குளங்களில் நீர் வரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டதால் ஆழ்குழாய் மூலம் வரும் நீரை குடிக்க வேண்டிய நிலை ஏராளமான கிராமங்களுக்கு ஏற்பட்டது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள கிராமங்களிலும் ஆழ்குழாய் (போர்வெல்) சிறு மின்விசை பம்பு அமைக்கப்படுகிறது. குளத்து நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் மூலம் வரும் நீர் கிடைக்காத ஊர்களில் இந்த ஆழ்குழாய் மூலம் கிடைக்கும் நீரையே குடிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகள் உள்ள ஊர்கள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீரை பள்ளி ஆசிரியர்கள் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்களின் பரிசோதனையில் குளோரைடு, புளோரைடு, அமிலத்தன்மை, காரத்தன்மை, இரும்புச்சத்து, நைட்ரைடு, நேட்ரேட், எஞ்சியுள்ள உப்புக்கள், எஞ்சியுள்ள குளோரின், பாஸ்பேட், அமோனியா, நுண்கிருமி சோதணை என சுமார் 16 சோதனைகள் செய்யப்பட்டன. இவ்வாறு செய்யப்பட்ட பரிசோதனைகளில் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் நீர் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் குடிக்கும் நிலையில் இல்லை. இதை நேரடியாக குடித்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்பதும் தெரியவந்தது. நல்ல முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டு வரும் குளங்களில் கிடைக்கும் நீர் ஆழ்குழாய் நீரைவிட நல்ல தன்மை நிறைந்துள்ளது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளில் சில பேரூராட்சிகளுக்கு மட்டுமே தனியாக குடிநீர் திட்டங்கள் உள்ளன. மொத்தமுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.