வலங்கைமான் ஊராட்சி அலுவலகத்தில் 3 பணியிட கலந்தாய்வில் 50% பேர் பங்கேற்கவில்லை 163 பேர் மட்டுமே வந்தனர்

வலங்கைமான், பிப்.28: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற மூன்று பணியிடங்களுக்கான கலந்தாய்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 50 சதவீதம் பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு பதிவறை எழுத்தர் பணியிடமும், இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கும் விண்ணப்பம் முன்னதாக பெறப்பட்டது. இதற்கான நேர்காணல் கடந்த இரண்டு நாட்களாக ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. ஒன்றிய ஆணையர் சிவக்குமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலவலர்கள் சான்றுகளை சரிபார்த்தனர். முன்னதாக பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு 249 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு 73 விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு நடைபெற்ற நேர்காணலில் 116 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதேபோல் இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நடைபெற்ற நேர்காணலில் 47 பேர் மட்டுமே பங்கேற்றனர். மொத்தம் காலியாக உள்ள மூன்று பணியிடத்திற்கு 322 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 163 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதன் மூலம் சுமார் 52 சதவீதம் பேர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டு நேர்காணலில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: