முத்துப்பேட்டை, பிப்.27: முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் சமூக விரோதிகளின் புகலிடமான பயனற்ற கல்வி அலுவலகத்தில் இரவு நேரத்தில் சலங்கை ஓசை கேட்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலைக்கு முன்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அரசு மீட்டு உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் புதியதாக கட்டி திறக்கப்பட்டது. போதுமான அலுவலர்களுடன் இயங்கி வந்த இந்த அலுவலகம் அனைத்து பணியாளர்களுக்கும் எந்தவிதமான சிரமங்களும், தொந்தரவுகளும் இல்லாமல் பயனில் இருந்தது.இந்தநிலையில் கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வௌ்ளத்தில் இந்த உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மூழ்கியது. இதில் வௌ்ளநீர் புகுந்ததில் அலுவலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களும் முற்றிலும் சேதமானது. இதனால் அடுத்து வந்த நாட்களில் தனியார் ஒருவர் தானமாக வழங்கிய முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் எதிரே உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது. முன்பு இயங்கிய அந்த கட்டிடத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், தற்பொழுது அந்த கட்டிடம் பொலிவு இழந்து சேதமாகி விட்டது.