ஸ்ரீமுஷ்ணம், பிப். 27: ஸ்ரீமுஷ்ணம் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஆதிவராகநல்லூரில் பொதுப்பணித்துறை வாய்க்கால் ஓரம் உள்ள புளியமரத்தில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியது. நேற்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து முஷ்ணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் தற்கொலை செய்து கொண்டவர் ஸ்ரீமுஷ்ணம் சக்கரைகுளத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (45) என தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி லதா (40) என்ற மனைவியும், பூபாலன் (16), பாலாஜி (15) என்ற மகன்களும் உள்ளனர். குடிப்பழகத்திற்கு அடிமையாகி இருந்த பாலகிருஷ்ணன் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.