ஏற்காடு, பிப்.26: ஏற்காடு முளுவி கிராமத்தில் பழுதடைந்த தார் சாலையை புதுப்பிக்க கோரி, நேற்று காலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து, 10 கிலோ மீட்டர் தொலைவில் முளுவி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வேலைக்காகவும், மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல ஏற்காடு பஸ் நிலையம் வந்து சேலத்துக்கு செல்ல வேண்டி உள்ளது. முளுவி கிராமத்திற்கு செல்லும் தார் சாலை, கரடியூர் பிரிவு முதல் சேதமடைந்துள்ளது. கரடு முரடான சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பஸ்கள் தாமதமாக செல்கின்றன. இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை முளுவி கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.