சிதம்பரம், பிப். 26: சிதம்பரம் நகர எல்லை வழியாக ஓடுவது கான்சாகிப் வாய்க்கால். சிதம்பரம் நகரின் வழியாக சென்று 50க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு மிகவும் முக்கிய நீர் ஆதாரமாகவும், பாசன வாய்க்காலாகவும் இந்த வாய்க்கால் பயன்படுகிறது. சமீபத்தில்தான் இந்த வாய்க்கால் தூர்வாரப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே தற்போது இந்த வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து காணப்படுகிறது.கான்சாகிப் வாய்க்காலின் பல கிலோ மீட்டர் தூரத்திற்கும் வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் முளைத்துள்ளது. செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால், தண்ணீர் தடையின்றி ஓடுவதற்கு வழியில்லாமல் பல இடங்களில் தேங்கி உள்ளது. இதனால் பின்னத்தூர், கொடிப்பள்ளம், கிள்ளை, பிச்சாவரம் போன்ற பல்வேறு கடைமடை பகுதிகளுக்கு பாசன நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாலும், இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.