சேத்தியாத்தோப்பு, பிப். 25: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு 25 கண்மாய் பாலத்தில் தேங்கியுள்ள மண்குவியலை விரைந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்குட்பட்டதும், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பாலமான 25 கண்மாய் பாலம் சுமார் இரண்டு நூற்றாண்டுகளை கடந்த பாலமாகும். மிகவும் குறுகலான இந்தப்பாலம் மயிலாடுதுறை, காரைக்கால் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம், திருச்சி ஆகிய பெருநகரங்களை இணைக்கும் பிரதான பாலமாகும்.இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகளும், பள்ளி, கல்லூரி வாகனங்களும், கனரக வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.