விவசாயிகள், சேகோ ஆலை அதிபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

சேலம், பிப்.21: மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், சேகோ ஆலை அதிபர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.  

மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை வகித்து பேசியதாவது: மரவள்ளி கிழங்கு சாகுபடி விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், சேகோசர்வ் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் கலந்து, பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை, நடப்பாண்டு 6991 ஹெக்டேரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. பராம்பரிய பயிராக சாகுபடி செய்து வரும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதை பிரதான பொருளாக விவாதிக்கப்பட்டது.

மிக முக்கியமாக ஸ்டார்ச் புள்ளி அடிப்படையில், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு விலை கொடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. சேகோசர்வ் ஆலைகளில் மக்காச்சோள மாவு கலப்படத்தை தடுப்பதற்காக கடந்த ஒரு வருட காலமாக ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.  சிறு சேகோ ஆலைகள் முதல் பெரிய அளவிலான சேகோ ஆலைகள், சேலம் மாவட்டத்தில் நிரம்பி காணப்படுகின்ற ஒரு தொழிலாகும். மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், தொழில் முன்னேற்றம் அடைவதற்காகவும், சேகோசர்வ் ஆலை உரிமையாளர்கள் மற்றும் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். சரியான விலை கிடைக்க, மரவள்ளி கிழங்கு விவசாயிகள், இடைதரகர்கள் இல்லாமல் நேரடியாக ஆலைகளை அணுக வேண்டும்.

Related Stories: