பெரியகுளம், பிப்.20: பெரியகுளம் தென்கரை பகுதியில் வசித்து வருபவர் வசந்தி. இவர் தனது மகள் மனிஷாவுடன் சேர்ந்து அகமலை மலைக்கிராம மலைவாழ் பழங்குடி இன மக்கள் 57 பேரிடம் பெரியகுளம் பகுதியில் உள்ள வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வாரம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தை மக்கள் முற்றுகையிட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வசந்தியும், மனிஷாவும் மலைக்கிராம பழங்குடி இன மக்களை நாடி அவர்களின் ஆதார் மற்றும் குடும்ப அட்டையை கொடுத்தால் வங்கியில் ஒருவருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை வங்கி கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.