காரைக்குடி, பிப். 20: காரைக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் தேவைக்கு ஏற்ப காலை, மாலை வேளைகளில் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்காததால் படிக்கட்டில் தொங்கி செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. எனவே உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி பகுதியில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவில் அரசு பஸ் இயக்கப்படாத நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் பஸ்களில் மாணவர்கள் தொங்கி கொண்டு சென்றாலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இது ஒருபுறமென்றால் கிராமப்புறங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் இயக்கப்படும் பஸ்கள் மிகமோசமாக பழுதடைந்து பயணிகளையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளன. இதனால் தினமும் பல்வேறு வழித்தடங்களில் பஸ்கள் பழுதடைந்து விடுவதும், விபத்துகளில் சிக்குவதும் தொடர்கதையாகி வருகின்றன.