கொள்ளிடம், பிப். 18: கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் அதிவேக விசைப்படகுகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன் பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள், 250 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டுப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் துறைமுகத்தில் அதிவேக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் சிறிய வகையிலான விசைப்படகு உரிமையாளருக்கு இடையே மீன் பிடிப்பதில் கடந்த 8 மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் மீனவ பிரதிநிதிகளுடன் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு ஏற்படவில்லை. இதனால் அதிவேக விசைப்படகுகள் அங்கீகரிக்கப்படாத மற்றும் மீன்பிடி துறையில் பதிவு செய்யப்படாத படகுகளாக அறிவிக்கப்பட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் சுமார் 80 அதிவேக விசைப்படகுகள் கடந்த 8 மாதங்களாக எந்த பயனுமின்றி துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளான. இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத படகுகள் துறைமுகத்தில் நிறுத்தக்கூடாது என்றும் அவைகளை அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு சிறிய ரக விசைப்படகு உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.