கரூர், பிப்.18: கரூர் கருப்பாயிகோயில் தெருவில் மினிகுடிநீர் தொட்டியில் தண்ணீர்நிரம்பி வீணானதால் குடிநீரை சிக்கனமாக கையாள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் கருப்பாயிகோயில் தெரு இறக்கத்தில் பொதுமக்கள் உபயோகத்திற்காக ஆழ்குழாய் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு நேற்று நீரேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. எனினும் தொட்டி நிரம்பியும் மோட்டாரை நிறுத்தவில்லை. இதனால் தண்ணீர் வழிந்து அருகில்உள்ள வடிகாலில்போய் வீணானது. நீண்டநேரத்திற்கு பின்னரே மோட்டார் நிறுத்தப்பட்டது. சம்மந்தப்பட்டவர்களின் அஜாக்கிரதையால் மின்சாரம் அதிக செலவாவதுடன், குடிநீரும் வீணானதைக் கண்டு சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்தனர்.