பெருகவாழ்ந்தான் அருகே மகனை கம்பியால் அடித்து கொன்ற தந்தை கைது

மன்னார்குடி, பிப்.18:பெருக வாழ்ந்தான் அருகே சொத்தை பிரித்து கேட்டு தினமும் மது குடித்து விட்டு ரகளை செய்த மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் பெருக வாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன் (48). இவருக்கு வனஜா (40) என்ற மனைவியும், அருண், அபிஷேக் என்ற இரு மகன்கள் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர். 2 மகன்களும் தாயுடன் உள்ளனர். குபேந்திரன் தனது தந்தையான காளிமுத்து (82) வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் குபேந்திரன் கடந்த 15ம் தேதியன்று தனது தந்தை வீட்டின் பின்புறம் உள்ள கீற்றுக் கொட்டகையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து முன்விரோதம் அல்லது கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக குபேந்திரன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக குபேந்திரனின் தந்தை காளிமுத்து மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை நேற்று முன்தினம் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ஹேமலதா ஆகியோர் தீவிர விசாரனையில் ஈடுப்பட்டனர். அதில் தனது மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக காளிமுத்து ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், குபேந்திரன் வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால் அவரின் மனைவியும், 2 மகன்களும் தனியாக சென்று விட்டனர். அதன் காரணமாக தனது தந்தையான காளிமுத்து வீட்டில் தங்கியிருந்த குபேந்திரன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து குடும்ப சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததோடு வயதான தாய், தந்தையை அடித்து உதைத்து வந்துள்ளார். இதனால் வேதனையில் இருந்த தந்தை காளிமுத்து, கடும் கோபத்தில் கடந்த 15ம் தேதி நள்ளிரவில் மது போதையில் படுத்து கிடந்த குபேந்திரனை இரும்பு கம்பியால் அடித்து கொன்று விட்டார் என கூறினர்.விசாரணையின் அடிப்படையில் மகனை கொலை செய்ததாக தந்தை காளிமுத்து (82) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.குடும்ப சொத்தை பிரித்து கேட்டு குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனை தந்தையே இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் பெருகவாழ்ந்தான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: