முத்துப்பேட்டை, பிப்.18: உதயமார்த்தாண்டபுரத்தில் வெறிநாய் கடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபுரம் தெற்குதெரு, கீழக்காடு, நாச்சிக்குளம், காலனிதெரு, காலவேண்டிகுளம், வடக்கு பள்ளியமேடு, ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்புவதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி டூவீலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சில நாய்களுக்கு வெறி பிடித்துள்ளதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறி சாகடித்து வருகிறது. இதில் தெற்குதெரு, கீழக்காடு, நாச்சிக்குளம், காலனிதெரு, காலவேண்டிகுளம், வடக்கு பள்ளியமேடு ஆகிய பகுதியை சேர்ந்த விஜய நிர்மலா, லதா, தனலட்சுமி, ஜானகி, சுரேகா, தேவிகா, முத்துக்கண்ணு, மற்றொரு லதா, ஜோதி, அபிராமி ஆகியோரின் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி சாகடித்தது.