திருமயம்,பிப்.17: திருமயம் பாலம் கட்டும் பணிக்கு சாலையின் குறுக்கே தோண்டப்பட்ட பள்ளம் சரி செய்யப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மவட்டம் திருமயத்தில் இருந்து வி.லட்சுமிபுரம் வழியாக நச்சாந்துபட்டி செல்லும் வழியில் என்.புதூர் பகுதியில் கடந்த ஆண்டு பாலம் கட்டும் பணிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டது. இதனை தொடர்ந்து பாலம் கட்டும்பணி முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் சாலையின் குறுக்கே உள்ள பள்ளத்தை சாி செய்ய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்து சுமார் அரை அடி ஆழத்திற்கு சென்று விட்டது.