பேராவூரணி அருகே நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலி

பேராவூரணி, பிப்.13: பேராவூரணி அருகே நாய்கள் கடித்து 12 ஆடுகள் பலியாயின. பேராவூரணி அருகே சொர்ணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சோலைராஜன். இவரது மனைவி செல்வராணி. இவர்கள் பரம்பரையாக செம்மறி ஆடுகளை வைத்து கிடை அமைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த செம்மறி ஆடுகளை, பராமரிப்பின்றி தெருவில் திரியும் 10க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளே புகுந்து கடித்து குதறியது. இதில் 12 செம்மறி ஆடுகள் இறந்தன. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயத்துடன் ஆபத்தான நிலையில் உள்ளது. இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ 1 லட்சம் எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சொர்ணக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் விஜயபாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் தாசில்தார் மற்றும் கால்நடைத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர் ரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி சோலைராஜன் கூறுகையில்,வெறிநாய்கள் கடித்து 12 ஆடுகள் இறந்து விட்டன. 10 ஆடுகள் உயிர் பிழைக்குமா எனதெரியவில்லை. ஆடுகள் பலியானதால் சுமார் ரூ.1 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள என்னால் இந்த இழப்பை தாங்க முடியாது. அரசு எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: