திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகளில் மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறுகிறது, அகற்றிய பிறகு ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு பெருகி விடும் என்பது அனைவருக்கும் தெரிந்து ஒன்று. இதனால் பொதுமக்கள் தினம் தினம் படும் பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல. மேலும் நகரத்தின் உட்பகுதிகளிலும் ,தெருக்களிலும் அதிகமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் முதன்மை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது வாகனங்கள் மாற்று வழியில் செல்ல முடியவில்லை. அவசர காலங்களில், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்லமுடியவில்லை.